சினிமா

'நடுநிசி நாய்கள்' என்ற சைக்கோ படத்தை குறைந்த செலவில் தயாரித்து, ஏகத்துக்கும் லாபம் பார்த்துள்ளார் கௌதம் மேனன். படம் குறித்து அதிர்ச்சியும் வேதனையும் கலந்து விமர்சனங்கள் வந்தாலும், முதல் சில நாட்களிலேயே போட்ட காசை எடுத்துவிட்டார்களாம். முதல் வார முடிவில் விநியோகஸ்தர் ஷேராக ரூ 1.10 கோடி கிடைத்துள்ளது இந்தப் படம் மூலம். இந்த தெம்போடு அடுத்த தமிழ்ப் படத்தை ஆரம்பிக்கிறார் கௌதம் மேனன். ஜூலையில் துவங்கும் இந்தப் படத்தில் அநேகமாக சூர்யா நடிக்கக் கூடும் என்கிறார்கள். ஹீரோயின் எமி ஜாக்ஸன். 'மதராசபட்டினம்' புகழ் அதே எமிதான். அநேகமாக இந்தப் படம் அவர் நீண்ட நாட்களாக தள்ளிப் போட்டு வந்த 'சென்னையில் ஒரு மழைக்கால'மாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு அடுத்து தனது இந்திப் படத்தை ஆரம்பிக்கிறார் கௌதம் மேனன். 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் ரீமேக் இது. த்ரிஷா வேடத்தில், எமி ஜாக்ஸனே நடிக்கிறார். பிரதீக் பாபர், ஓமி வைத்யா ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான்தான் இசை. பாடல்கள் ஏற்கெனவே தயாராக உள்ளதால், நேராக படப்பிடிப்புக்குச் செல்கிறாராம் கௌதம் மேனன்.
இப்டியெல்லாம் சம்பாதிச்சாதான அப்டியெல்லாம் எடுக்க முடியும்


'ஏழாம் அறிவு' படத்தின் பாடல் வெளியீடு மார்ச் 28-ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஒரு சர்க்கஸ் நிகழ்வாக நடைபெற இருக்கிறது. இந்தப்படத்தில் சூர்யா ஒரு சர்க்கஸ் சாகஸக் கலைஞராக நடிக்கிறார் என்ற செய்தி ஏற்கனவே வெளியாகி விட்டாலும், அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர் மிக ரகசியமாக வைக்கப்பட்டது. சூர்யா அன்வர் பாஷா என்ற கதாபாத்திரத்தில் வருகிறார் என்பதுதான் இன்றை பிரத்யேகச் செய்தி. இவரை காதலிக்கும் ஷாலினி என்ற கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். அடுத்த மாதம் 10-ஆம் தேதியோடு 'ஏழாம் அறிவு' படப்பிடிப்பு முடிகிறது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்தப் படத்தின் பின் உருவாக்கப் பணிகளுக்காக மட்டும் இரண்டு மாதங்களை செலவிட இருக்கிறார். மேலும் கிராஃபிக்ஸ் பணிகளுக்கும் அதிக முக்கியத்துவம் உள்ள படம் இது. இதற்கிடையில் படத்தை ஆகஸ்டில் வெளியிட முடிவு செய்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி. 'ஏழாம் அறிவு' தெலுங்கிலும் டப் செய்யப்பட இருக்கிறது. பாடல் வெளியீட்டில் பார் விளையாட்டு, எட்டு பந்துகளை தூக்கிப் போட்டு பிடிப்பது, மனித பிரமீட் செய்து காட்டுவது உட்பட பத்துவித சாகஸங்களை பயிற்சிபெற்ற சர்க்கஸ் கலைஞர்களோடு செய்து காட்ட இருக்கிறார் சூர்யா. சீக்கிரம் படத்த முடிங்கப்பா.. சர்க்கஸ் பாக்கணும்ல....



'வானம்' படத்தின் இன்னொரு நாயகியான சினேகா உல்லலுக்கு பதில் ஜாஸ்மின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சிம்பு நடிக்கும் 'வானம்' படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக சினேகா உல்லல் நடிக்க ஒப்பந்தமானார். படத்தின் துவக்க விழாவிலும் அவர் பங்கேற்றார். ஏற்கெனவே சிம்புவின் இன்னொரு படத்திலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இதனால் சிம்புவின் நெருக்கமான நடிகைகள் பட்டியலில் அவரும் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் 'வானம்' படத்திலிருந்து சினேகா உல்லல் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் டெல்லியைச் சேர்ந்த ஜாஸ்மின் ஒப்பந்தம் செய்யப்பட்டு, அவர் தொடர்பான காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளன. அதெப்படிங்க.... வம்புகூட ஜோடி போடுற ஆளு மட்டும் மாறிகிட்டேயிருக்காங்க...?


நாகையில் இன்று விஜய் ஆர்ப்பாட்டம்!

 இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதைக் கண்டித்து இன்று நாகப்பட்டினத்தில் நடிகர் விஜய் தலைமையில் அவரது ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். தொடர்ந்து கண்டனக் கூட்டமும் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கும் போராட்டத்திற்கும் அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்தின் முதல் அடியாக இது பார்க்கப்படுவதாலும், அதிமுக ஆதரவு கொடுத்திருப்பதாலும், தேர்தல் சமயம் என்பதாலும் இந்த போராட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. விஜய் ரசிகர்களோடு அதிமுகவினரும் பெரும் திரளாக கலந்து கொள்ளவுள்ளதால் கூட்டம் களை கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல லட்சம் பேரை இக்கூட்டத்திற்கும், போராட்டத்திற்கும் திரட்ட விஜய் தரப்பு தீவிரமாக உள்ளது. இதன் பொருட்டே அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் சமீபத்தில் சந்தித்துப் பேசினார். இதையடுத்தே விஜய் போராட்டத்திற்கு அதிமுக தனது ஆதரவை அளித்தது. இன்று மாலை 4 மணிக்கு இந்தப் போராட்டம் மற்றும் கண்டனக் கூட்டம் நடைபெறுகிறது. போராட்டத்தின்போது பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையையும், நிவாரண உதவிகளையும், நலத் திட்ட உதவிகளையும் வழங்குகிறார் விஜய்.